​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Published : Oct 23, 2024 8:17 PM



திருச்செந்தூரில் கஞ்சா அசுரர்களால் “கண்பார்வை கேள்விக்குறியானது".. இளைஞரின் சகோதரி கண்ணீர்..! போலீசாரின் இரும்புக்கரம் பாயுமா ?

Oct 23, 2024 8:17 PM

திருச்செந்தூரில் இரவில் வேலைக்கு சென்று விட்டு தனியாக பைக்கில் வீடு திரும்பிய இளைஞரை மறித்து வழிப்பறி செய்த கஞ்சா குடிக்கிகள் தாக்குதல் நடத்தியதில், இளைஞரின் கண்பார்வை கேள்விக்குறியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முருகப்பெருமான் அசுரர்களை வென்ற இடமான திருச்செந்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் அங்கு நாளுக்குள் நாள் கஞ்சா குடிக்கிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க புகார் தெரிவிக்கும் காட்சிகள் தான் இவை..!

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி - சிவ செல்வி தம்பதியரின் மகன்

முத்து சுகலேஷ் . தாயார் சிவசெல்வி திருச்செந்தூர் கோவில் வாசல் பகுதியில் இட்லி வியாபாரம் செய்து வரும் நிலையில் முத்து சுகலேஷ் திருநெல்வேலியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வேலையை முடித்து விட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பினார் .

இரவு 11 மணி அளவில் திருச்செந்தூர் வீரராகபுரம் குதிரைவண்டி தெருவில் நின்ற 4 பேர் கொண்ட மர்ம கும்பல் பைக்கை வழிமறித்து முத்து சுகலேஷை சரமாரியாக தாக்கி அவரது தங்க செயின், செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளது. மேலும் முத்து சுகலேஷை சரமாரியாக கல்லால் முகத்தில் தாக்கி விட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகின்றது.

பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய முத்து சுகலேஷை அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மர்ம நபர்கள் கல்லால் தாக்கியதில் முத்து சுகலேஷின் ஒரு பக்க கண்பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் கோவில் நிலைய போலீசார் 2 பேரை கைது செய்ததாகவும் இருவரை போலீசார் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்

இந்த நிலையில் முத்து சுகலேஷின் சகோதரி புவனேஷ்வரி கண்ணீரோடு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் எங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. அதில் அடிமையானவர்கள் எனது தம்பியை வேலைக்கு சென்று திரும்பியபோது கீழே கிடந்த கல்லால் சரமாரியாக கண்பகுதியில் தாக்கியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்

தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்வதோடு, இந்த கஞ்சா விற்பனையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.